ஊட்டி: ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் வனச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சாலை பலவீனமடைந்ததால் தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொட்டபெட்டா சிகரம் திறக்கப்படாமல் உள்ள நிலையில், இதனை அறியாமல் வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவிற்கு ெசல்ல முடியாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
இதுதவிர இங்கு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த நவம்பர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சேதமடைந்துள்ள பகுதியில் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு கழிவுநீர் செல்ல வசதியாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.